உத்தரகாண்ட் மாநிலத்தில் வழக்கமாக ஜூலை மாதத்தில் அதிகளவு பெய்யும் மழை வழக்கத்திற்கு மாறாக இந்த மாதமே பெய்யத் துவங்கியது.
இருந்த போதும் அதற்கான வானிலை எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் தான் உத்தரகாண்ட்டில் பேரழிவு ஏற்பட்டதாக திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மழை லேசாக பெய்ததால் பக்தர்கள் புனித யாத்திரை சென்றார்கள். ஆனால் ஜூன் 14, 15, 16 ஆகிய தேதிகளில் 3 நாட்களாக இடை விடாது வானம் பிளந்தது போல் மழை கொட்டியதனால் வரலாறு காணாத வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. இக் காலநிலை சீர்கேடு பற்றி வானிலை இலாகா போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
ஆனால் வானிலை இலாகா உரிய எச்சரிக்கை விடுத்தது என்று உயர் அதிகாரி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"உத்தரகாண்டில் 14, 15, 16 ஆகிய தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும். எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், புனித யாத்திரை செல்வதை ஒத்தி வையுங்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையானது சம்பந்தப்பட்ட மாநில உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. குறிப்பாக தலைமை செயலாளர் மற்றும் புனித யாத்திரை நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள், புனித யாத்திரை மீட்பு மையம் தேசிய பேரிடர் மீட்பு மையம் ஆகியோருக்கு மாநில வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கை விடுத்தது.
முதலில் 14-ந்தேதி பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கை தகவல் பேரிடர் மீட்பு நிர்வாக இயக்குனருக்கு விடுக்கப்பட்டது.
அத்துடன், 15-ந்தேதி மீண்டும் அடுத்த 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவல் ருத்ரபிரயாக்கில் முகாமிட்டு இருந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதில் "யாத்திரிகர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்" என்று எச்சரிக்கப்பட்டது. யாத்திரை ஏற்பாடு செய்பவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதன்பிறகு 16, 17-ந் திகதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 4 நாட்கள் யாத்திரை செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டது. இது போன்ற எச்சரிக்கை மிக அபூர்வமாகத்தான் வெளியிடப்படும்."
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தலைமை செயலாளரிடம் இது குறித்து கேட்டபோது:
"வானிலை அறிக்கைகள் வழக்கமாக மழை பெய்யும், பலத்த மழை பெய்யும் என்று தான் இருக்கும் இந்த ஆண்டு தீவிரமான நிலை, கடுமையான நிலை என்று குறிப்பிட்டு சொல்லவில்லை" என்றார்.
மிக பலத்த மழை பெய்யும் என்று சொல்வது வழக்கமான அறிவிப்புதான் என்று பேரிடர் மீட்பு குழுவும் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !