
இந்த திரைப்படத்தின் கதை இலங்கை சம்மந்தப்பட்டது என்பதால், அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது.
ஈழத்தமிழர்களை தவறான விதத்தில் சித்தரித்திருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களை நடிகர் ஜான் ஆபிரகாம் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் படத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதையை படமாக்கியுள்ளோம். யாருடைய மனமும் புண்படும் விதமாக இந்தப் படம் அமையாது.
இலங்கையில் நடந்த விஷயங்களை காண்பித்திருக்கிறோமே தவிர, அதை ஆதரிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ படத்தில் எந்த கருத்தையும் நாங்கள் சொல்லவில்லை. அதையும் மீறி சிலர் அரசியல் நடத்த நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியோ, ஈழத்தமிழர்களைப் பற்றியோ, இலங்கை அரசைப் பற்றியோ எந்த விமர்சனமும் இந்தப் படத்தில் இல்லை.
நானும் ஒரு இந்திய குடிமகன்தான். எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றது. இந்த சமூகத்தைப் பற்றிய தவறான கருத்தை நான் சொல்லமாட்டேன்.
இந்தப் படத்தை சில தமிழ் அமைப்புகள் முன்கூட்டியே திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்றனர். அவர்கள் கோரிக்கையின்படி படத்தை திரையிட தயார். அவர்கள் படம் பார்த்த பிறகு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளிவருவதற்கு முன்பாக இதுபோன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். படம் வெளிவந்த பிறகு நாம் இந்தப் படத்தின் விஷயங்களை விவாதிப்பதே ஆரோக்கியமானது என்றார்.
இந்தப் படம் எடுக்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ பணம் கொடுத்தாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !