Headlines News :
Home » » வரலாற்று சிறப்புமிக்க, ஆலய உற்சவங்கள்.

வரலாற்று சிறப்புமிக்க, ஆலய உற்சவங்கள்.

Written By TamilDiscovery on Monday, August 5, 2013 | 11:21 PM

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தேர் திருவிழா நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது.

1990களின் பின்னர் உயர்பாதுகாப்பு வலயமாக வலி,வடக்கு பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த ஆலயத்தின் மஹோற்சவங்கள் பெரியளவில் விமரிசையாக நடைபெறவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு மிகுந்த போராட்டங்களின் பின்னர், உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களில் ஒரளவு பிரதேச மக்கள் தமது வாழ்விடங்களில் நிரந்தரமாக தங்கியிருக்கும் நிலையில், மிக நீண்டகாலத்தின் பின்னர் இவ்வாண்டு மக்கள் உள்ளூரிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர்.

மிக விமரிசையாக இவ்வாண்டு வருடாந்த மாஹோற்சவமும், தேர் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.





 

 

 

 

 

 

 

 

 

மாமாங்கப் பிள்ளையார் ஆலய தேர் உற்சவம்.

கந்தபுராண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 9வது தினமான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இன்று மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






 

 

 

 

 

 

 

 

 

களைகட்டுகிறது நல்லூர் கந்தன் ஆலய உற்சவ ஏற்பாடுகள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 தினங்கள் உற்சவம் வழமைபோல் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இவ் உற்சவத்தை முன்னிட்டு ஆலய நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை வெகுசிறப்புடன் செய்து வருகின்றனர். மேற்படி உற்சவத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் விசேட கூட்டம் ஒன்று யாழ். மாநகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மகோற்சவ உபயகாரர்கள், யாழ். மாநகர சபை ஊழியர்கள், வர்த்தகர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆலய தொண்டர் சபை உறுப்பினர்கள், பாடசாலைச் சாரணர்கள், சுகாதார தொண்டர்கள், வைத்தியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இ.போ.ச. உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆலய உற்சவத்தை முன்னிட்டு வழமையாக மூடும் வீதி தடைகள் இம் முறையும் போடப்படும் இத் தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள். கந்தர்மடம், முத்திரைச் சந்தி உட்பட பல இடங்களில் இ.போ.ச. சிறப்பு பஸ்தரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மாநகர சபை ஊழியர்களால் ஆலயச் சூழல் தினமும் சுத்தமாக்கப்பட்டு வருகின்றது.

தாகசாந்தி நிலையங்கள் மற்றும் அடியார்கள் இளைப்பாறுவதற்கான கொட்டகைகள் என்பன அமைக்கப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. மற்றும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் சென். ஜோன்ஸ் படை உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

இதைவிடத் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் தென்னிலங்கையிலிருந்து பெரும் தொகையான மக்கள் உற்சவ தினங்களில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்சவ தினங்களில் கலந்து கொள்ளும் அனைத்து அடியார்களுக்கும் நல்லூர் துர்க்காமணி மண்டபம், நல்லை ஆதீனம், நல்லூர் மூத்த தம்பி மடத்திலும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. உற்சவ தினங்களில் பங்குபற்றும் ஆண்கள் வேஷ்டி அணிந்தும் பெண்கள் சேலைகள் அணிந்தும் பக்தி பூர்வமாக கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். இம்முறை உற்சவ தினங்களில் இலட்சக்கணக்கான அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளமையினால் பெண்கள், சிறுவர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும். சுமங்கலிப் பெண்கள் தலைக்குப் பூசூடி குங்குமப் பொட்டு அணிந்து தமிழ் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணும் வகையில் ஆலயத்துக்கு வருமாறும் வேண்டப்படுகின்றனர்.

அத்துடன் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தினரால் குடாநாட்டில் புகழ்பூத்த இசைக் கலைஞர்களின் கர்நாடக சங்கீத கச்சேரிகளும் வளரும் இளம் கலைஞர்களின் சங்கீத கச்சேரிகளும் பக்கவாத்தியமும் நடைபெறவுள்ளன.

இதைவிட நல்லூர் ஆதீன மண்டபத்தில் புகழ் பூத்த சமய பெரியார்களின் சமயச் சொற்பொழிவுகளும் கதாப்பிரசங்கங்கள் ஆகியனவும் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template