Headlines News :
Home » » பிரபாகரனின் மனைவி சேலத்தில் இருப்பதாக சி.பி.ஐக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பொறியிலாளர் கைது!

பிரபாகரனின் மனைவி சேலத்தில் இருப்பதாக சி.பி.ஐக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பொறியிலாளர் கைது!

Written By TamilDiscovery on Sunday, August 4, 2013 | 3:47 AM

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்தின் சேலத்தில் பதுங்கி இருப்பதாக, இந்திய மத்திய விசாரணை பிரிவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பொறியிலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் 32 வயதான கே.துரைராஜ் என்ற பொறியிலாளரான இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த 30 வயதான செல்வராணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் துரைராஜ், தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து தனியே வசித்து வந்தார். இங்கு வந்து வேலை தேடி வந்த துரைராஜ், கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதனால் இந்த கல்லூரி நிர்வாகம் வேலைக்கு வந்து சேர சில நாட்களுக்கு முன்பு துரைராஜூக்கு கடிதம் அனுப்பி இருந்தது. துரைராஜ் தனது முகவரியை மாமனார் வீட்டு விலாசத்தில் கொடுத்து இருந்தார்.

இங்கு கடிதம் வந்து பல நாட்கள் ஆகியும் இந்த தபாலை துரைராஜிடம் தரவில்லை. இதனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதை அறிந்த துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார். பல மாதம் போராடி வேலையில் சேர கடிதம் வந்தும் தன்னால் வேலையில் சேர முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தனது மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் செல்வராணி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பலமுறை துரைராஜ் அழைத்தும் அவர் மறுத்து விட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் வாழ்க்கையை வெறுத்த துரைராஜ், தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் டெல்லி மற்றும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், சிலருக்கு செல்போனில் குறுஞ் செய்திகளை அனுப்பி வைத்தார்.

இதில், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரில் வசிக்கும் பட்டறைக்காரர் மணி, பாப்பாத்தி, தர்மலிங்கம், கார்த்தி ஆகியோருடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தங்கி உள்ளார் என்றும், இவர்கள் அனைவரும் சேலத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சிக்கிறார்கள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனால் உஷாரான டெல்லி பொலிஸார் தமிழக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க உத்தரவிட்டனர். பின்னர் சென்னை பொலிஸார், சேலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு பொலிஸாரும், கியூ பிரிவு பொலிஸாரும் கடந்த இரண்டு நாட்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரித்தனர். பிறகு துரைராஜின் மாமனார் மணியின் வீட்டில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது அங்கு விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இல்லை என்றும் தெரியவந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் துரைராஜ் தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க இப்படி குறுஞ் செய்தி தகவல் அனுப்பியது தெரியவந்தது. பொலிஸார் துரைராஜை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். அவர் மீது தவறான தகவலை தெரிவித்து தவறான சூழ்நிலையை உருவாக்கியது, பொய் தகவல்களை பரப்பியது ஆகிய பிரிவுகளின் கீழ் கிச்சிபாளையம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு குறுஞ் செய்தி அனுப்பிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் வேறு வழக்குகளில் ஏதும் சிக்கி உள்ளாரா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template